நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று 5:30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று இது மேலும் வலுவடைந்து புயலாக (நிவர்) தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25ஆம் தேதி மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும்.
காலை 8:30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மாலை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதன்காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்; மற்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கன மழையும்; பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை திருவண்ணாமலை, புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.