சென்னை
கொரோனா சூழநிலைகளுக்கு மத்தியில் 2021 – 2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமரின் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் 64,180 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்கள் திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம காப்பீட்டுத்துறையில் அந்திய நேரடி முதலீடு 49-ல் இருந்து 74 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது போன்ற இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2021 – 22 பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.